TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்து

கர்த்தத்துவத்தின் தோள்

கிறிஸ்துவின் பிறப்பை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா தீர்க்கன், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்” (ஏசாயா 9:6) என்றான். கர்த்தத்துவம் என்பது “ஆளுகை” அல்லது “அரசாட்சியை” குறிக்கும். நம்முடைய ஆண்டவர் இராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

“இஸ்ரவேலை ஆளப்போகிறவராக” (மீகா 5:2) மீகாவும், “இஸ்ரவேலிலிருந்து எழும்பும் செங்கோலாக” (எண் 24:17) பிலேயாமும், இயேசுகிறிஸ்துவை முன்னுரைத்தது அவர் தோளின் மீதிருந்த கர்த்தத்துவத்தை (இராஜரீகத்தை) தூரத்திலேயே கண்டதினாலே.

அவருடைய மானிட வாழ்விலும் அவரின் தோளின் மேலிருந்த கர்த்தத்துவத்தை ஜனங்கள் கண்டார்கள்.

* கிழக்கிலிருந்து தேடி வந்த சாஸ்திரிகள். (மத் 2:1,2,11).

* நாத்தான்வேல் (யோவா 1:48,49).

* எருசலேமின் ஜனங்கள் (யோவா 12:13).

சிலுவையிலும் அவர் கர்த்தத்துவம் மாறவில்லை, என்பதை அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனின் வார்த்தைகள் புலப்படுத்துகிறது (லூக் 23:42). அவரை பரிகாசம்பண்ணும்படியாக “நசரேயனாகிய இயேசு யூதருடைய இராஜா” என்று எழுதப்பட்டதும் (யோவா 19:19), அவரின் கர்த்தத்துவம் வெளிப்படும்பொருட்டே.

உயிர்தெழுந்த கிறிஸ்துவாய் தம்மை சீஷர்களுக்கு வெளிப்படுத்தினபோது, “ஆண்டவரே இக்காலத்திலா இராஜியத்தை இஸ்ரவேலுக்கு திரும்ப கொடுப்பீர்” (அப் 1:6) என்று கேட்டதும், அவர் தோளின்மீதிருந்த கர்த்தத்துவத்தினிமித்தமே. மகிமையிலும் அவர் இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்.

ஆனால், கர்த்தத்துவத்தை சுமந்த அதே தோள், சாபத்தின் சின்னமாகிய சிலுவையை சுமந்ததை யோவான் 19:17-ல் வாசிகிறோம். சிலுவையை சுமந்தார் என்றால் நம்முடைய துக்கங்களை (ஏசா 53:4), அக்கிரமங்களை (ஏசா 53:11), பாவங்களை (ஏசா 53:120 சிலுவையின் உருவில் சுமந்தார். நாம் அனுபவிக்க வேண்டிய பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அவர் ஏற்றுக்கொண்டார். “நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சுமந்தார்” (1 பேதுரு 2:24). நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்கவே அவர் வெளிப்பட்டார் (1 யோ 3:5). உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியானார்.

அவர் சிலுவையை சுமந்தது துக்கத்தோடே அல்ல; தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டே (எபி 12:2). அது எந்த சந்தோஷம் தெரியுமா? நம்மை அவர் தோளின் மீது சுமக்கப்போகிற சந்தோஷம் (லூக் 15:5,6). ஆம், காணாமல் போன ஆட்டை கண்டுபிடித்த மேய்ப்பன் தன் தோளின் மீது ஆட்டை சுமந்து கொண்டு சந்தோஷப்பட்டதுபோல, நம்மை அவரின் கர்த்தத்துவமுள்ள தோளில் உட்கார வைத்து சந்தோஷப்படுகிறார். அவருக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக!

தாவீதின் திறவுகோலை உடையவரின் கர்த்தத்துவமுள்ள தோலில் நாம் இராஜரீக கூட்டமாய் உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் (1 பேதுரு 2:9). அவருடைய அன்பு அளவிடப்படமுடியாது.

அவர் தோளில் அமர்ந்திருக்கும் நாம் சிலுவையின் உருவில் நம்முடைய பாவங்களை சுமந்த தோளிலுள்ள காயங்களை முத்தம்செய்து, கர்த்தத்துவமுள்ள தோளில் கனிவாய் நம்மை அமரவைக்க கடினசிலுவை சுமந்தவரை நினைவுகூர்ந்து கருத்துடனே தொழுதிடுவோம்! ஆமென்.

Vivekk7

2 thoughts on “கர்த்தத்துவத்தின் தோள்

  • எனக்கு மிகவும் பயன்படுகிரது

    Reply
  • Joyebinezar

    கர்த்தருக்கு தோத்திரம் நல்லதொரு விளக்கங்கள்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)